தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே மகளிர் இடஒதுக்கீடு என்பது மத்திய அரசின் சூழ்ச்சி - சிவசேனா எம்பி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கை பாசங்குத்தனமானது என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி குற்றம்சாட்டியுள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போதே இம்மசோதா குறித்து பாஜக வாக்குறுதி அளித்திருந்தும் இதனைக் கொண்டு வர 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதன்கிழமை மக்களவையில் அதீத பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, "அவர் (அமித் ஷா) அறிக்கை பாசாங்குத்தனமானது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே, 2014-ம் ஆண்டு தேர்தலின் போதே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று பாஜக பெண்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் (2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்கள்) இருந்தும், இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு இருந்தும் அதனை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு 9 ஆண்டுகளாகியிருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதிகள் மறுவரையறைக்குப் பின்னர்தான் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற ஷரத்தால் இது மிகவும் பாசாங்குத்தனமான ஒன்று.

ஏனெனில் 2021ம் ஆண்டிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதாமாகி வருகிறது. இந்த ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வாய்ப்பில்லை. 2029க்கு முன்னர் தொகுதி மறுவரையறை பணி நடக்காது என்பது எனது கருத்து. புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2031ல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால், விஷயங்கள் அதற்கு பின்னரும் நகரலாம். பெண் வாக்காளர்களை கவருவதற்காக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒரு கருவியாக பயன்படுத்த நினைக்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் சூழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்கள், (2024-ல்) அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்". இவ்வாறு சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை நடந்த விவாததில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதிகள் மறுவரையறை பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன் பின்னர் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும்" என்று தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இம்மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் என்று மக்களவையில் நிறைவேற்றிய பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2008-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான யுபிஏ அரசு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தியது. 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் மசோதா எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE