ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ராணுவத்தின் சினார் படைப்பரிவு தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில், பாரமுல்லாவின் உரி செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள பாகிஸ்தான் நிலையில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது, மூன்றாவது தீவிரவாதியின் உடலை மீட்பதற்கு இடையூறாக உள்ளது. எனினும் அந்த உடலையும் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அனந்த்நாக் மாவட்டத்தில் மலைப்பாங்கான வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடர்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE