அவுரங்காபாத், உஸ்மானாபாத் பெயர்கள் மாற்றம்: மகாராஷ்டிர அரசு அறிவிக்கை வெளியீடு

By செய்திப்பிரிவு

மும்பை: மகாரஷ்டிராவில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அம்மாநிலத்தின் அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜி நகர், தாராஷிவ் என மாற்றுவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை வெளியிட்ட அறிவிக்கையில், "சில மாதங்களாக கேட்கப்பட்ட ஆலேசானைகள், ஆட்சேபனைகளின் பரிசீலனைகளின்படி, துணைக் கோட்டங்கள், கிராமங்கள், தாலுகாக்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்கள் மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்றும் முடிவு முந்தைய மகா விகாஸ் அதாடி அரசால் எடுக்கப்பட்டது. கடந்த 2022, ஜூன் 29-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக, அப்போதைய முதல்வரான உத்தவ் தாக்ரே தலைமையில் நடந்த கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதனை, தற்போது ஆட்சியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் கூட்டணி அரசு, ‘நகரங்களின் பெயரினை மாற்றும் முடிவு சட்டவிரோதமானது. ஏனெனில், உத்தவ் தாக்கரேவை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரிய பின்னர் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். இதனிடையே, உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவுக்கு பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக அரசு பதவியேற்றது.

இதனிடையே, கடந்த ஜூலை மாதத்தில் அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத்தின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர், தாராஷிவ் என மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அவுரங்காபாத்தின் பெயரை சம்பாஜிநகர் என மாற்ற முந்தைய மகாவிகாஸ் அகாடி அரசு முடிவெடுத்திருந்த நிலையில், தற்போதை அரசு ‘சத்ரபதி’ என்ற முன்னொட்டைச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE