நிபா எதிரொலி: கோழிக்கோட்டில் செப்.24 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (செப்.24) வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தொற்று எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்துக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நிபா பாதிப்பு 1080 ஆக உள்ளது. இவர்களில் 327 பேர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவர்.
கோழிக்கோட்டைத் தவிர அண்டை மாவட்டங்களான மலப்புரம், கண்ணூர், திரிசூர், வயநாட்டிலும் நிபா தொற்று பரவியுள்ளது.

முன்னதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜீவ் பாஹல் அளித்தப் பேட்டியில், "நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் என்றால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் ஆக உள்ளது.

மேலும், கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியபோது அது வவ்வால்கள் மூலமாகவே பரவியது என்பதை நாங்கள் உறுதி செய்தோம். ஆனால் இப்போது வைரஸ் பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பொதுவாகவே மழைப்பருவத்தில் இந்த நோய் அதிகம் பரவுகிறது.

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் இருந்து 'மோனோகுளோனல் ஆன்டிபாடி' மருந்தை கொள்முதல் செய்திருந்தோம். தற்போது, அந்த மருந்து 10 நோயாளிகளுக்கு மட்டுமே போதுமான அளவுக்கு இருக்கிறது. இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை.

தற்போது நிபா பரவல் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் 20 டோஸ் மருந்து கொள்முதல் செய்ய இருக்கிறோம். இந்த மருந்தை தொற்றின் ஆரம்பகட்டத்தில் அளிக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE