ஆதித்யா விண்கல சுற்றுப்பாதை 4-வது முறை மாற்றம்: செப்., 19-ம் தேதி சூரியனை நோக்கி பயணிக்கும் என தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுப்பாதை உயரம் 4-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும்நவீன விண்கலத்தை இந்திய விண்வெளிஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 235 கி.மீட்டர் தூரமும், அதிகபட்சம் 19,500 கி.மீ தூரமும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 4-வது முறையாகதற்போது மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆதித்யா விண்கலம் புவிக்கு அருகே வரும்போது அதிலுள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு சுற்றுப்பாதை தூரம்படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.அதன்படி விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரை 3 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4-வது முறையாகநேற்று முன்தினம் நள்ளிரவில் விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் உயர்த்தப்பட்டது.

அதன்படி குறைந்தபட்சம் 256 கி.மீ தூரமும், அதிகபட்சம் ஒரு லட்சத்து 21,973 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.

சூரியனை நோக்கி பயணம்: அடுத்தகட்டமாக ஆதித்யா விண்கலம் செப்டம்பர் 19-ம் தேதி புவிவட்டப் பாதையில் இருந்து விலகி சூரியனை நோக்கி பயணிக்க தொடங்கும். தொடர்ந்து 4 மாதகால பயணத்துக்கு பின்னர் புவியில் இருந்து 15 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE