“சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது இண்டியா கூட்டணி” - பிரதமர் மோடி ஆவேசம்

By செய்திப்பிரிவு

பினா (மத்தியப் பிரதேசம்): “சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள்" என்று பிரதமர் மோடி ஆவேசமாக குற்றம்சாட்டியுள்ளார்.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அம்மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் நடந்த பேரணிக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "சமீபத்தில் அவர்கள் (எதிர்க்கட்சி கூட்டணி) மும்பையில் கூட்டம் நடத்தினர். அங்கு அவர்கள் காமாண்டியா கூட்டணியை எவ்வாறு வழிநடத்துவது மற்றும் அரசியல் வியூகம் குறித்து முடிவெடுத்திருப்பார்கள் என்று நான் நினைத்தேன். அவர்கள் மறைமுக கொள்கை ஒன்றினையும் எடுத்துள்ளனர். இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துவது என்பதே அது. இந்தியர்களின் நம்பிக்கை மீது தாக்குதல் நடத்தி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாட்டை ஒருங்கிணைத்து வந்த எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் மரபுகளை அழிக்க நினைக்கிறார்கள்.

‘காமாண்டியா’ கூட்டணியினர் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள். இன்று அவர்கள் வெளிப்படையாக சனாதன தர்மத்தின் மீது குறிவைத்துள்ளார்கள். நாளை நம் மீதும் தாக்குதலைத் தொடங்குவார்கள். நாடு முழுவதும் உள்ள சனாதானிகள் மற்றும் நாட்டை மிகவும் நேசிக்கும் அனைவரும் அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்றவர்களை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, "டெங்கு , மலேரியா போல சனாதனத்தையும் அழிக்கப்பட வேண்டும்" என்று பேசினார். அவரது இந்தப் பேச்சை முன்வைத்து இண்டியா கூட்டணி மீது பாஜக கடும் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE