சந்திரயான்-2 விண்கலம் எடுத்த லேண்டர் படங்கள் - இஸ்ரோ வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டன. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 12 நாட்கள்ஆய்வு செய்து பல அரிய தகவல்களையும் நமக்கு அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நில அதிர்வின் தன்மை உட்பட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதற்கிடையே நிலவின் தென்துருவப் பகுதியில் இரவு சூழல் நிலவுவதால் லேண்டர், ரோவர் கலன்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் (sleep mode) வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் செப்டம்பர் 22-ம்தேதி பகல் பொழுது திரும்பியதும் லேண்டர், ரோவர் கலன்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலவை சுற்றிவரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், உறக்கநிலையில் உள்ள லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. டிஎப்சார் (DFSAR-Dual-frequency Synthetic Aperture Radar) எனும் ரேடார் கருவிமூலம் செப்டம்பர் 6-ம் தேதி இந்தபடம் எடுக்கப்பட்டது. இந்த கருவிசந்திரயான்-2 ஆர்பிட்டரில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நிலவின் துருவப்பகுதிகளை கண்காணித்து பல்வேறு படங்களை டிஎப்சார் அனுப்பி வருகிறது. அதன்படி சிவசக்தி பகுதியில் உள்ள லேண்டரையும் தற்போது படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஜூன் 2-ம் தேதி லேண்டர் தரையிறங்கும் முன் எடுக்கப்பட்ட படத்தையும், தரையிறங்கிய பின் எடுத்த படத்தையும் ஒப்பிட்டு இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே சந்திரயான்-2 விண்கலம் 2019 ஜூலை 22-ம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. அதில், லேண்டரை தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. எனினும், நிலவின் சுற்றுப்பாதையில் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதிலுள்ள கருவிகள் மூலம்தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது செயல்பாட்டில் இருப்பதால் சந்திரயான்-3 விண்கலத்தில் ஆர்பிட்டர் அனுப்பப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE