பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறவில்லை - மஜத மூத்த தலைவர் குமாரசாமி விளக்கம்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று முன் தினம், ‘‘வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சி இணைந்துள்ளது.

அக்கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்’’ என தெரிவித்தார்.

இதுகுறித்து மஜத முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக எடியூரப்பா கூறியது அவரதுதனிப்பட்டக் கருத்தாகும். பாஜகவுடன் தொகுதிப் பங்கீடுதொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

நாங்கள் இரண்டு, மூன்று முறை மரியாதை நிமித்தமாக பாஜக தலைவர்களை சந்தித்துள்ளோம். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE