புதுடெல்லி: டெல்லியில் இன்று தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மாலை விருந்து அளிக்கிறார்.
பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த விருந்துக்கு அனைத்து மத்திய அமைச்சர்களும் மாநில முதல்வர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடாவும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கார்கே, கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து கொண்டவர். நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் என்று அவரது அலுவலகம் தெரிவித்தது. ஆனால் அரசியல் கட்சித் தலைவர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க விருப்பதை முதல்வர்கள் நிதிஷ் குமார் (பிஹார்), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), மம்தா பானர்ஜி (மே.வங்கம்), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), அர்விந்த் கேஜ்ரிவால் (டெல்லி), பகவந்த் மான் (பஞ்சாப்) ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.