பெங்களூரு: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்ததை தொடர்ந்து தேவகவுடா அண்மையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது 5 தொகுதிகளை தேவகவுடா கேட்டார். இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் தேவகவுடா உடன் பாஜக மேலிடத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பாஜக கூட்டணியில் மஜத இணைவது உறுதியாகியுள்ளது. மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி கோலார், ஹாசன், மண்டியா, பெங்களூரு ஊரகம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.