ஜி 20 உச்சி மாநாடு 2023 | 15 நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் செப்.9, 10 தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டினை ஒட்டி பிரதமர் மோடி 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல்களின்படி, செப்.8 ஆம் தேதி (இன்று) பிரதமர் மோடி, மொரீசியஸ், வங்கதேசம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். செப்.9 ஆம் தேதி (சனிக்கிழமை) ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கூடுதல் நிகழ்வாக அன்று இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அடுத்த நாள் செப்.10 ஆம் தேதி பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுயேல் மேக்ரானை மதிய உணவு வேளையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் கோமோரோஸ், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ஐரோப்பிய யூனியன், பிரேசில் மற்றும் நைஜீரியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ-வுடன் தனிப்பட்டமுறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜி20 அமைப்பின் 18-வதுஉச்சி மாநாடு, இந்தியா தலைமையில் டெல்லியில் செப்.9 ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 14 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே, ஜி 20 உச்சி மாநாட்டினை முன்னிட்டு மாநாடு நடைபெறும் பகுதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE