உதயநிதி மீது பரேலி காவல் நிலையத்தில் புகார் - மாவட்ட கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் விளக்கம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெங்கு, மலேரியா, கரோனாவைப் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கூறி இருந்தார். இக்கருத்து இந்துக்களின் மீதான கடும் விமர்சனமாக வட மாநிலங்களில் மாறியுள்ளது. பல மாநிலங்களின் காவல் நிலையங்களிலும் உதயநிதி மீது வழக்குகள் பதிவாகத் தொடங்கி உள்ளன.

உபியின் ராம்பூர் சிவில் லைன் பகுதி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அமைச்சர் உதயநிதி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே ஆகிய இருவர் மீதும் ஐபிசி 153ஏ, 295ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ராம்பூரை போலவே, உபியின்பரேலியிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பார் என பரேலி மாவட்ட கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் சன்ஸார் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உபியின் காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘உதயநிதி விமர்சித்த சனாதனம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு மதம் அல்ல மாறாக, அதன் ஒரு பிரிவினரின் கோட்பாடு அல்லது கொள்கை எனலாம். எனவே, உதயநிதி பேச்சின் அடிப்படையில் நாட்டில் எங்காவது கலவரம் மூண்டால்தான் அவரைக் கைது செய்ய முடியும்.

இதனால், டெல்லி உள்ளிட்ட வேறுசில இடங்களில் பதிவான வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் சேர்த்து ஒரே வழக்காக ஏதாவதுஒரு நீதிமன்றம் விசாரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதால் பொறுத்திருந்தே நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.

உதயநிதி மீதான குற்றங்கள் நிரூபணமானால் அதற்கான தண்டனை அதிகபட்சம் ஏழு வருடங்கள். இதுபோல், ஏழு வருடங்களுக்கும் குறைவாக தண்டனை பெறும் வழக்குகளில் கைது நடவடிக்கை கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நோட்டீஸ் அளித்து நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது ஆஜராக வேண்டி வரும். அவரது வழக்கறிஞரை அனுப்பியும் வாதாடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE