பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் - என்.சி. கட்சியின் மூத்த தலைவர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய மாநாட்டு (என்.சி.) கட்சியின் மூத்த தலைவர் முகமது அக்பர் லோன், காஷ்மீரின் பாரமுல்லா மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “காஷ்மீர் சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய முகமது அக்பர் லோன் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்திய அரசியல் சாசனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவருக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதையடுத்து, ஒரு நாளில் ஒரு பக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என முகமது அக்பர் லோனை வலியுறுத்துமாறு அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாட்டின் இறையாண்மையை ஏற்பதாகவும், இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அந்த பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என தெரிவித்தனர்.

பின்னர் கபில் சிபல் கூறும்போது, “பாகிஸ்தானுக்கு ஆதரவாக லோன் கோஷம் எழுப்பியது முன்பே தெரிந்திருந்தால் அவர் சார்பில் வாதாட வந்திருக்க மாட்டேன். எனவே, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அவரிடம் வலியுறுத்துவேன். அதற்கு மறுத்தால் நான் அவர் சார்பில் வாதாட மாட்டேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE