செப்.14 வரை மட்டுமே ஆன்லைனில் ஆதார் அப்டேட் இலவசம்: நெருங்கும் கெடு தேதி!

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் 14-ம் தேதி வரையில் மட்டுமே ஆன்லைன் வழியே பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஆதார் அட்டை பயனர்கள் இலவசமாக புதுப்பிக்க முடியும். அதன்பிறகு அந்த சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆஃப்லைன் வழியே ஆதார் மையங்களிலில் இந்த சேவைக்கு தகுந்த கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன்படி மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் மக்கள் இலவசமாக புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதனை மேலும் மூன்று காலம் செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புகைப்படம், கருவிழி மற்றும் பயோ மெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டும்.

அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை மக்கள் ‘மை ஆதார்’ எனும் தளத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவில் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற ஆதார் அட்டை பயன்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஆதார் அட்டை அறிமுகமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE