தேவகவுடா பேரன் எம்.பி. பதவி இழப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

By இரா.வினோத்


பெங்களூரு: கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அமோக வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியை சேர்ந்த சமூகஆர்வலர் தேவராஜ் கவுடா என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், 'தேர்தலின்போது பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த‌ பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரது சொத்து மதிப்பில் ரூ. 24 கோடி குறைவாக காட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்த பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’என கோரியிருந்தார்.

ஆதாரங்களுடன் நிரூபணம்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடராஜன், ‘‘பிரஜ்வல் ரேவண்ணா போலி ஆவணங்கள் மூலம் பொய்யான தகவல்களை தெரிவித்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது. அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படுகிறது’’ என தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து பிரஜ்வல் ரேவண்ணா கூறும்போது, ‘‘இந்ததீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன். அங்கு எனக்கு நீதி கிடைக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE