நகர்ப்புற ஏழை, நடுத்தர மக்கள் வீடு வாங்க மானியம்: மத்திய அரசின் புதிய திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நகர்புறங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்கும் வகையில், கடன் மானியம் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட வங்கியில் கடன் பெறுபவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும்.

ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்கு மத்திய அரசு கடன் மானியம் வழங்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறது என்று கடந்த சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். “நடுத்தர மக்கள் தங்களுக்கென்று சொந்த வீடு வாங்கும் கனவைக் கொண்டிருக்கின்றனர். நகர்ப்புறங்களில் பல ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாடகை வீட்டில், சேரிகளில், அங்கீகாரமற்ற இடங்களில் வசித்து வருகின்றனர். அத்தகைய குடும்பங்கள் சொந்த வீடு வாங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சொந்த வீடு வாங்க விரும்பும் மக்களுக்கு மத்திய அரசு கடன் மானியம் வழங்கி உதவும். இதனால், அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாகும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தத் திட்டம் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு வீட்டு வசதி வழங்கும் நோக்கில் மத்திய அரசு 2015-ம் ஆண்டு ஆவாஸ் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கும் திட்டம், ஆவாஸ் யோஜனா திட்டத்தின் விரிவாக்கமாக இருக்கும் என்று
கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE