3 பேரை கொன்ற யானை - ‘கும்கி’ உதவியால் பிடிபட்டது

By செய்திப்பிரிவு

சித்தூர்: ஆந்திரா-தமிழகம் எல்லையில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டம், குடிபாலா பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒற்றை யானை ஒன்று 190 ராமாபுரம் மற்றும் சி.கே பல்லி போன்ற கிராமங்களில் சுற்றி திரிந்தது.

அப்போது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் (50), அவரது மனைவி செல்வி (48) ஆகியோர் மீது அந்த மத யானை தாக்குதல் நடத்தி கொன்றது. அதன் பின்னர் சி.கே பல்லியில் கார்த்திக் எனும் இளைஞரையும் காயப்படுத்தியது.

மதயானை இருவரை கொன்றதால், அப்பகுதி கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்து, வீட்டிலேயே அடைப்பட்டு கிடந்தனர். இது குறித்து சித்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனிடையே நேற்று காலை ஆந்திரா-தமிழக எல்லையில் உள்ள போடிநத்தம் கிராமத்தில் அந்தயானை மதம் பிடித்து திரிவதாக தகவல்கள் பரவின. மேலும், வசந்தா (57) எனும் பெண்மணியை அந்த யானை மிதித்து கொன்றுள்ளது. இதனால் யானையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், திருப்பதி, சித்தூர் வனத்துறையினர், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மதயானையை பிடிக்க குடிபாலாவுக்கு வந்தனர். மேலும், 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. அவற்றின் உதவியால், மதயானையை மயக்க ஊசி போட்டு நேற்று மாலை வனத் துறையினர் பிடித்தனர். அதன் பின்னர் அந்த யானையை அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். யானை பிடிபட்டதால், அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE