பாடம் கற்பித்து கொண்டிருந்தபோது வகுப்பறையில் ஆசிரியையிடம் முத்தலாக் கூறிய கணவர்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசம் பெரோஷாபாத்தை சேர்ந்தவர் முகமது ஷகீல் (35). இவருக்கும் பாராபங்கியை சேர்ந்த தமன்னாவுக்கும் (23) கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடைபெற்றது.

திருமணமான ஒரு மாதத்துக்குள் முகமது ஷகீல் குடும்பத்தினர், தமன்னாவிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினர். பெற்றோரிடம் பணத்தை வாங்கி வரும்படி கூறி, அவரை வீட்டு விட்டு துரத்தினர். இதன்காரணமாக தமன்னா, பாராபங்கியில் உள்ள தாய் வீட்டுக்கு திரும்பினார்.

இந்த சூழலில் முகமது ஷகீல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார். கணவர் கைவிட்ட நிலையில் பாராபங்கியில் உள்ள தனியார் பள்ளியில் தமன்னா ஆசிரியையாக பணியாற்றி வாழ்க்கையை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சவுதியில் இருந்து முகமது ஷகீல் உத்தர பிரதேசம் திரும்பினார். மனைவி தமன்னாவை தேடி சென்ற அவர், அவரோடு 6 நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் தனது சொந்த ஊரான பெரோஷாபாத்துக்கு சென்றார்.

கடந்த 24-ம் தேதி முகமது ஷகீல் மீண்டும் பாராபங்கிக்கு திரும்பி வந்தார். மனைவி வீட்டில் இல்லாததால் அவர் பணியாற்றும் பள்ளிக்கு சென்றார். அங்கு தமன்னா வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொண்டிருந்தார். நேராக வகுப்பறைக்கு சென்ற முகமது ஷகீல், மனைவியோடு கடுமையாக வாக்குவாதம் செய்தார். பின்னர் 3 முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE