மும்பை | இந்திய அரசியலமைப்பு, தேசிய சின்னம், பாரத மாதா படம் - ‘இண்டியா’ கூட்ட அரங்கில் காட்சி

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. இந்நிலையில், இந்த கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு வெளியில் இந்திய அரசியலமைப்பின் நகல், தேசிய சின்னத்தின் மாதிரி மற்றும் பாரத மாதா படம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது மூன்றாவது கூட்டம் மும்பையில் தொடங்கி உள்ளது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இண்டியா கூட்டணிக்கான இலச்சினை (லோகோ) வெளியிடப்படுகிறது. தொகுதி பங்கீடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மும்பை ஆலோசனை கூட்ட அரங்குக்கு வெளியில் இந்திய அரசியலமைப்பின் நகல், தேசிய சின்னத்தின் மாதிரி மற்றும் பாரத மாதா படம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE