மரண தண்டனைக் கைதிகள் 6 பேர் தங்களின் தண்டனையை ரத்து செய்யக் கோரி அளித்திருந்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.
சுரேந்திர கோலி (உத்தரப் பிரதேசம்), ரேணுகாபாய், சீமா (மகாராஷ்டிரம்), ராஜேந் திர பிரகலாதராவ் வாஸ்னிக் (மகாராஷ்டிரம்), ஜெகதீஷ் (மத்தியப் பிரதேசம்), ஹோலி ராம் போர்டோலாய் (அசாம்) ஆகியோரின் கருணை மனுக் களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
நிதாரி கொலை வழக்கு
உத்தரப் பிரதேசம், நொய்டா நகரில் நிதாரி பகுதியில் 2005 முதல் 2006 வரை 18 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். பாயல் என்ற இளம்பெண்ணும் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்திர கோலிக்கு (42) கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை 2011-ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், தனது மனைவியையும் 4 மகள்களையும் ஒரு மகனையும் கொலை செய்த வழக்கில் 2006-ல் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை 2009-ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இவர்கள் உட்பட மேலும் சில வழக்குகளில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 6 பேர் தங்களது ன தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கருணை மனு அளித்திருந்தனர். அவற்றை பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.