சந்திரயான்-3 திட்ட வெற்றி பெண் சக்தியின் வாழும் உதாரணம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி பெண் சக்தியின் வாழும் உதாரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 27 104-வது பாக உரையை அவர் ஆற்றினார்.

பிரதமர் உரையின் முக்கியத் துளிகள்: > நிலவின் தென் துருவத்துக்கு விண்கலனை அனுப்பிய இஸ்ரோவுக்கு பாராட்டுகள். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி இந்தியப் பெண் சக்தியின் வாழும் உதாரணம். சந்திரயான் -3 திட்டம் முழுவதும் பெண் விஞ்ஞானிகள், பெண் பொறியாளர்கள் திட்ட இயக்குநர்கள், மேலாளலர்கள் எனப் பல படிநிலைகளிலும் பணியாற்றியுள்ளனர்.

> டெல்லியில் செப்டம்பர் 8 தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டுக்கு தலைமை தாங்க இந்தியா தயார் நிலையில் இருக்கின்றது. செப்டம்பர் மாதம் இந்தியாவின் திறன் என்னவென்பது உலகரங்கில் நிரூபணமாகும்.

> சுதந்திர தினத்தன்று 10 கோடி மக்கள் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர்.

> இந்த உலகின் பழமையான மொழிகளில் சம்ஸ்கிருதமும் ஒன்று. நவீன மொழிகள் பலவற்றின் தாய்மொழியாக சம்ஸ்கிருதம் உள்ளது. அது பழமைக்கும், அதன் அறிவியல் தன்மை, இலக்கணத்துக்காகப் பெயர் பெற்றது. சம்ஸ்கிருதத்தை மேம்படுத்த அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச சம்ஸ்கிருத தினத்துக்கு வாழ்த்துகள். அதேபோல் அன்றைய தினம் கடைப்பிடிக்கப்படவுள்ள ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்துக்கு வாழ்த்துகள். இவ்வாறாக பிரதமர் பேசினார்.

வீராங்கனைக்குப் பாராட்டு: நிகழ்ச்சியின்போது சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அப்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை பிரகதியுடன் பிரதமர் மோடி உரையாடினார். மூளை ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட அவர் எப்படி அதிலிருந்து மீண்டு பதக்கங்களை வென்றார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE