சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆராய செப்.2-ல் ஆதித்யா செயற்கைக்கோளை அனுப்ப முடிவு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: சந்திராயன்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், சூரியனை பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) ராக்கெட் மூலம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள எல்-1 என்று அழைக்கப்படும் சூரியனின் ஒளிவட்டபாதையில் ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். சூரியனை பற்றிய ஆய்வுக்காக, இஸ்ரோ மேற்கொள்ளும் முதல் விண்வெளி திட்டம் இது. ஆதித்யா-எல்1 என்ற இந்த செயற்கைக்கோள், விண்வெளியில் இருக்கக் கூடிய ஒரு ஆய்வுக் கூடமாக செயல்படவுள்ளது.

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ்( Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.

ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. ஆதித்யா செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம், செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.

‘வியோம்மித்ரா’ பெண் ரோபோ: தனியார் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கியது இஸ்ரோ வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றம். விண்வெளித் துறையை பிரதமர் மோடி திறந்து விட்டதும் இதற்கு காரணம். கடந்த 2019-ம் ஆண்டு வரை ஸ்ரீஹரிகோட்டாவின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், இந்த முறை பள்ளிக் குழந்தைகளும் அழைக்கப்பட்டனர். விண்வெளித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் கரோனா தொற்று காரணமாக தாமதமானது. இதன் முதல் பரிசோதனை திட்டத்தை, அக்டோபர் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறோம். விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது போல் அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதும் மிக முக்கியம். இரண்டாவது திட்டத்தில், ‘வியோம்மித்ரா’ (விண்வெளி நண்பன்) என்ற பெண் ரோபோவை இந்தியா அனுப்பவுள்ளது. அது விண்வெளி வீரர்கள் செய்யும் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும். அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தால், அடுத்து நாம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப முடியும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE