மீண்டும் ஊர்வலம் நடத்த வலதுசாரி அமைப்புகள் தீவிரம்: நூ-வில் இணைய சேவை நிறுத்தம்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: வலதுசாரி அமைப்புகள் ஆக.28 ஆம் தேதி மீண்டும் மத ஊர்வலம் நடத்துவதில் தீவிரமாக இருப்பதால், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க நூ-வில் இரண்டு நாட்களுக்கு மொபைல் இணையம், மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.

ஹரியாணா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி நடந்த பிரிஜ்மண்டல் ஜலாபிஷேக யாத்திரையில் வன்முறை ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் வன்முறையால் நின்று போன யாத்திரையை மீண்டும் ஆக.28 தொடர முடிவெடுக்கப்பட்டிருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் அறிவித்துள்ளன.

ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இந்த யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் யாத்திரையை நடத்துவதில் வலதுசாரி அமைப்புகள் தீவிரமாக உள்ளன. இதனால் நூ பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மொபைல் இணையம் மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்பும் வசதிகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில உள்துறை சனிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சமூக வலைதளங்களின் மூலம் பல்வேறு தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் நூ மாவட்டத்தில் மொபைல் இணையம், மொத்தமாக எஸ்எம்எஸ் (வங்கி மற்றும் ரீச்சார்ஜ் நீங்கலாக) அனைத்து டாங்கில் சேவைகளும் நிறுத்தப்படும். பொதுமக்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், தனிநபர்கள் அனுப்பும் குறுஞ்செய்தி, மொபைல் ரீச்சார்ஜ், வங்கி எஸ்எம்எஸ் வசதி, வாய்ஸ் கால்கள், பிராட்பேண்ட் மூலம் வழங்கப்படும் இணைய சேவை, கார்ப்பரேட் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் லீஸ் லைன் இணையம் நிறுத்தப்படாது.

இந்த நடவடிக்கைகளால் மாநிலத்தின் நிதி மற்றும் வணிக நலன்கள், தனிநபர் தேவைகள் பாதிக்கப்படாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சனிக்கிழமை (ஆக.26) இரவு 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டு ஆக.28 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இதனிடையே, யாத்திரை குறித்து விஎச்பியின் இணைச் செயலாளர் சுரேந்தர் ஜெயின் கூறியதாவது: "நாங்கள் தீர்மானித்த படி எங்களின் யாத்திரையை மீண்டும் தொடங்க இருக்கிறோம். அது எங்களின் உரிமை. அதன்படியே நாங்கள் இதனை திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவது மாநில அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பு. அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வேண்டுமென்றால் நாங்கள் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். ஆனால் யாத்திரை மீண்டும் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE