கேரளாவின் வயநாடு பகுதியில் ஜீப் கவிழ்ந்து பயங்கர விபத்து: 9 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்து பயங்கர விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர்; 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயநாடு மாவட்டத்தின் தாலபூழா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீப்பில் மொத்தம் 14 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் ஓட்டுநர் நீங்கலாக 13 பேர் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். வளைவு ஒன்றில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சுமார் 25 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிற்பகல் 3.30 மணி அளவில் விபத்து நடந்துள்ளது. ஜீப் கவிழ்ந்த வேகத்தில் இரண்டாக உடைந்துள்ளது.

விபத்தில் சிக்கிய பெண்கள் அனைவரும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தமிழர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 5 பேருக்கு முறையான சிகிச்சை வழங்க மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE