வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் சம்பளம் 5 மடங்கு குறைவு: மாதவன் நாயர் கருத்து

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் 5 மடங்கு குறைவு என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி ஆய்வை தொடங்கி உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது:

இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வளர்ந்த நாடுகளைவிட 5 மடங்கு குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தபோதிலும் நமது விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.

மேலும் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது விஞ்ஞானிகள் மிகக் குறைவான செலவில் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பி உள்ளனர். இதற்கு அவர்கள் குறைவாக சம்பளம் பெறுவதும் ஒரு காரணம்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் யாரும் கோடீஸ்வரராக இல்லை. அவர்கள் அனைவரும் சாதாரணமாக வாழ்கிறார்கள். அவர்கள் பணத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. தங்களுடைய திட்டப் பணிகளில் முழு ஈடுபாடுடன் பணிபுரிகின்றனர். இதனால்தான் இந்தியா இத்தகைய வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இவ்வாறு மாதவன் நாயர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE