புதுடெல்லி: ராணுவ உபகரணங்கள் வாங்குதல் உட்பட ரூ.7,800 கோடி மதிப்பிலான மூலதன திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான கையகப்படுத்துதல் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறுகையில் “மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத் துறை கையகப்படுத்துதல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய ராணுவக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ரூ.7,800 கோடி மூலதன திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
லேப்டாப், டேப்லட் வாங்க.. எம்ஐ17வி5 ஹெலிகாப்டரில் பயன்படுத்துவதற்கான மின்னணு உபகரணங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் வாங்க இந்தத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய தரைப்படைக்குத் தேவையான தானியங்கி இயந்திரங்கள் வாங்கவும் குறைந்த எடை கொண்ட இயந்திர துப்பாக்கிகள், ராணுவத்தினருக்கு தேவையான லேப்டாப்கள், டேப்லட்டுகள் வாங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.