ரஷ்யாவின் லூனா-25 விண்கலம், சந்திரயானுக்கு போட்டியில்லை - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தை, சந்திரயானுக்கு போட்டியாக கருத வேண்டாம் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஆகஸ்ட் 23-ம் தேதி தென் துருவப் பகுதியில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்து உள்ளது.

இந்நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ரஷ்யாவும் லூனா-25 எனும் விண்கலத்தை நேற்று அதிகாலை 2 மணியளவில் விண்ணில் ஏவியது. இது நிலவின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள், கனிமங்கள், எரிபொருள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. சுமார் 5 நாட்கள் பயணத்துக்கு பின்னர் நிலவின் சுற்றுப்பாதையை விண்கலம் சென்றடையும். தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் சுற்றுப்பாதையில் சுற்றிவந்து நிலவில் லூனா-25 தரையிறங்க உள்ளது.

அதன்படி சாதகமான சூழல்கள் அமைந்தால் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பே லூனா-25 நிலவில் தரையிறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் 2 விண்கலங்களும் ஒரே நாளில் நிலவில் தரையிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைதளங்களில் இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது; இஸ்ரோவின் சந்திரயான்-3 மற்றும் ரஷ்யாவின் லூனா-25 விண்கலங்கள் ஒரேநாளில் ஒன்றுக்கு ஒன்று இடையூறு இன்றி நிலவில் தரையிறக்கப்பட உள்ளன. இதற்கிடையே 2011-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்து ரஷ்யா மேற்கொண்ட செவ்வாய் கிரக பயணத் திட்டம் தோல்வியடைந்தது. அதன்பிறகு முழுவதும் புதிய தொழில்நுட்பத்தில் லூனா-25 திட்டப் பணியை ரஷ்யா வடிவமைத்துள்ளது. அதன் செயல்பாடுகள் இறுதி வரை வெற்றிகரமாக அமைய வேண்டும்.

மறுபுறம் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் சந்திரயான்-3 திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, திட்டமிட்டபடி சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். அதனால் சந்திரயான்- 3, லூனா-25 ஆகியவற்றை போட்டியாக கருத வேண்டாம். இரு திட்டப்பணிகளும் வெற்றி பெற வேண்டும். எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வுகளில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதவிர இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘லூனா-25 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக ரோஸ்காஸ்மாஸ் (ரஷ்யா) மையத்துக்கு வாழ்த்துகள். நிலவை நோக்கிய பயணம் இனிமையாக அமையட்டும். இரு விண்கல திட்டங்களும் வெற்றி பெறட்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE