இறந்த தந்தையின் மனைவியாக நடித்து 10 ஆண்டு குடும்ப ஓய்வூதியம் பெற்ற மகள்

By செய்திப்பிரிவு

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் எட்டா மாவட்டம் அலிகஞ்சில் வஜாஹத் உல்லா கான் என்பவர், வருவாய் துறை கிளர்க்காக பணியாற்றினார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி காலமானார். அவருக்கு முன்னதாக அவரது மனைவி சபியா பேகம் இறந்துவிட்டார்.

இந்நிலையில், அவரது மகள் மோசினா பர்வேஸ் (36), தனது இறந்த தந்தையின் மனைவி எனக் கூறி 10 ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தது அம்பலமாகி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பரூக் அலி என்பவரை மோசினா திருமணம் செய்துள்ளார். அதன்பின் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தந்தையின் மனைவியாக போலி ஆவணங்கள் கொடுத்து, சட்டவிரோதமாக மாதந்தோறும் மோசினா குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவதும் பரூக் அலிக்கு தெரிந்துள்ளது.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். அதன் பின்னர்தான் மோசினாவின் மோசடி விவரத்தை பரூக் அலி போலீஸில் தெரிவித்துள்ளார்.

குடும்ப ஓய்வூதியம்: இதுகுறித்து, மோசினா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோசினாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின்படி தற்போது அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை அரசிடம் இருந்து ரூ.12 லட்சத்துக்கு மேல் குடும்ப ஓய்வூதியமாக மோசினா பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘குடும்ப ஓய்வூதியம் கோரிய விண்ணப்பத்தில் தனது தாயின் பெயரை மோசினா பயன்படுத்தி உள்ளார். மேலும், தனது புகைப்படத்தையே இணைத்துள்ளார். அதன்பின், அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. மோசினா விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கிடைத்ததில் அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம். அந்த விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளித்ததில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE