பாபர் மசூதி விஷயத்தில் விஜய ராஜே சிந்தியா கூறியதை நம்பினார் நரசிம்ம ராவ் - புத்தக விழாவில் நினைவு கூர்ந்தார் சரத் பவார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘பிரதமர்கள் எப்படி முடிவெடுக்கிறார்கள்’ என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் நீர்ஜா சவுத்திரி எழுதிய புத்தகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், காங்கிரஸ் எம்.பிசசி தரூர், முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சரத் பவார் பேசுகையில் கூறியதாவது: கடந்த 1992-ம் ஆண்டு ராம்ஜென்ம பூமி இயக்கம் வேகம் எடுத்த போது, நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களை அழைத்து பேச அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் முடிவு செய்தார். அந்த கூட்டத்தில் நான், அப்போதைய உள்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் இருந்தோம்.

அப்போது பாஜக சார்பில் பங்கேற்ற விஜய ராஜே சிந்தியா, பாபர் மசூதிக்கு எதுவும் ஆகாது என உறுதியளித்தார். எதுவும் நடக்கலாம் என உள்துறை அமைச்சரும், உள்துறை செயலாளரும் கூறினர். ஆனால் விஜய ராஜே சிந்தியா கூறியதை நரசிம்ம ராவ் நம்பினார். இவ்வாறு சரத் பவார் கூறினார்.

பத்திரிகையாளர் நீர்ஜா சவுத்ரி பேசுகையில், ‘‘பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பின், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை பத்திரிகையாளர்கள் சந்தித்தபோது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என கேள்வி கேட்கப்பட்டது. தீராத காயத்துக்கு இது முடிவை ஏற்படுத்தும் என இச்சம்பவம் நடைபெற அனுமதித்ததாகவும், இது பாஜக.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் நினைத்ததாகவும் தெரிவித்தார்’’ என்றார்.

ஐ.மு. கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக பணியாற்றிய பிரித்விராஜ் சவான் பேசுகையில் 2ஜி உட்பட பல ஊழல்கள், அன்னா ஹசாரே இயக்கத்தை சரியாக கையாளாகாதது போன்றவை காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டார்.

அவசர நிலை, இந்திரா காந்தி தோல்வியை சந்தித்தது, 1980-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது, ராஜீவ் எடுத்த முடிவுகள், மண்டல் கமிஷன் அறிக்கையை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்தியது, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்தில் அரசுகள் எவ்வாறு செயல்பட்டன என்பது பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE