வரும் 12, 13-ல் ராகுல் காந்தி வயநாடு பயணம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை எம்.பி.யாக மீண்டும் நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி ஆகஸ்ட் 12-ம் தேதி தனது வயநாடு தொகுதியை பார்வையிட செல்கிறார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் மக்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது வயநாடு தொகுதியை ஆகஸ்ட் 12 மற்றும் 13-ம் தேதி பார்வையிட செல்கிறார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஜனநாயகம் வென்றுள்ளது என வயநாடு தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்கவுள்ளது. ராகுல் எம்.பி. மட்டும் அல்ல. வயநாடு மக்களின் குடும்ப உறுப்பினர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்ட தால், டெல்லி துக்ளக் சாலையில் வழங்கப்பட்டிருந்த 12-ம் எண் அரசு வீட்டை ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலி செய்து, தாய் சோனியா வீட்டில் குடியேறினார். தற்போது அவர் மீண்டும் எம்.பி.யாகியுள்ளதையடுத்து, அவருக்கு மீண்டும் அதே வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE