எஃப்ஐஆரில் பிரிவு 153A சேர்ப்பு... - ஆர்பிஎஃப் காவலர் துப்பாக்கிச் சூடு பின்னணியில் மதம்?

By செய்திப்பிரிவு

மும்பை: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையை (ஆர்பிஎஃப்) சேர்ந்த காவலர் ஒருவர் தனது உயரதிகாரி உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆர்பிஎஃப் காவலர் சேத்தன் சிங் மீது ஐபிசி பிரிவு 302 (கொலை), ஆயுதச் சட்டம் 3, 25, 27 மற்றும் ரயில்வே சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஐபிசி 153A பிரிவின் கீழும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பிரிவு 153A: இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 153A, “மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்” தண்டனை அளிக்கிறது.

ரயிலில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சமயத்தில் ஆர்பிஎஃப் காவலர் சேத்தன் சிங் பாகிஸ்தான் மற்றும் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளை குறிப்பிட்டு வகுப்புவாத பேச்சுக்களை பேசியதாக வீடியோக்கள் வைரலாகின.

மேலும், அதே வீடியோவில் காவலர் சேத்தன் சிங், "பாகிஸ்தான் தொடர்பில் இருந்தவர்களையே நான் சுட்டுக் கொன்றுள்ளேன். இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் ஓட்டு போட வேண்டும்." என்று பேசுவது போல காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. எனினும், இந்த வீடியோவின் நம்பகத் தன்மை குறித்து ரயில்வே தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே தான், இன்று காவலர் சேத்தன் சிங் மீதான எப்ஐஆரில் பிரிவு 153A கீழ் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு சம்பவம் வகுப்புவாதத்தை மையப்படுத்தியது என்பதை உறுதி செய்துள்ளது. மேலும், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், ஆகஸ்ட் 11ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியும் பெற்றுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி: ஜெய்ப்பூர் - மும்பை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12956) ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. மும்பை ரயில் நிலையத்தை அடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக, ஜூலை 31 அதிகாலை 5 மணி அளவில் வைதர்னா ரயில் நிலையத்தை கடந்தபோது, பால்கருக்கு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் (33 வயது), அவரது உயரதிகாரியான உதவி எஸ்.ஐ. டிக்காராம் மீனா (57 வயது) என்பவரை முதலில் சுட்டுக் கொன்றார்.

பின்னர் அருகில் இருந்த பயணிகளின் பெட்டிகளுக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், அப்துல் காதிர், அஷ்கர் கேய் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு பயணி என 3 பேர்உயிரிழந்தனர். சேத்தன் சிங் தனது துப்பாக்கியால் மொத்தம் 12 முறை சுட்டதாக அருகில் இருந்த பயணிகள் கூறினர். தஹிசார் அருகே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, சேத்தன் சிங் தப்பிக்க முயன்றார். ஆனால், அவரை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE