உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 16 நீதிபதி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்க துணைச் செயலர் முகமது அப்பாஸ் தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. அதில் தற்போது 16 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மக்களுக்கு விரைவில் நீதி வழங்குவது அடிப்படை உரிமைகளின் ஒன்றாகும். அதற்கு போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் நியமிக்க வேண்டும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 16 நீதிபதிகள் காலியிடத்தை நிரப்ப வும், மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகளை மதுரை கிளைக்கு நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். அப்போது, இந்த மனு மீது முதன்மை அமர்வுதான் முடிவெடுக்க முடியும் எனக்கூறி, மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.