முழு கொள்ளளவை நெருங்கிய‌து கபினி அணை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகா மற்றும் கேரளாவில் பரவலாக ம‌ழை பெய்து வருவதால் கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட‌ப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்‍ பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிற‌து.

தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்களில் சாலையை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்கிறது.

இதனால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய‌ அணைகளுக்கு கணிசமான அளவில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருவதால் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 113.46 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 361 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 944 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2283.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 442 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 6 ஆயிரத்து 126 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக‌ விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து நீர்வரத்துகாரணமாக கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE