“வாய்மையே வெல்லும்!” - தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு ராகுல் காந்தி ரியாக்‌ஷன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "வாய்மையே வெல்லும். எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன்" என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இரண்டு வருட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று (ஆக.4) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஏஎம்சிங்வி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, "இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். ஜனநாயகம் வென்றுள்ளது. அரசியல் சாசனம் வென்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவினை நான் வரவேற்கிறேன். இது ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி மட்டும் இல்லை. இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. உண்மைக்காவும், நாட்டின் நலனுக்காவும் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று நாட்டு மக்களைச் சந்தித்துள்ளார். அவர்களின் ஆசிர்வாதங்கள் நம்முடன் உள்ளது.

ராகுல் காந்தியை தகுதி இழப்பு செய்வதற்கு 24 மணி நேரமே ஆனது. இனி அவரை பதவியில் மீண்டும் அமர்த்துவதற்கு எத்தனை நாளாகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது மக்களின் வெற்றி, வாக்காளர்களின் வெற்றி, இது வயநாடு மக்களின் வெற்றி" என்று கார்கே தெரிவித்தார்

அவரைத் தொடந்து பேசிய ராகுல் காந்தி, "நன்றி கார்கே ஜி... இன்று இல்லை என்றாலும், நாளை இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் வாய்மை வென்றே தீரும். எனது இலக்கு எனக்குத் தெரியும். நான் என்ன செய்யவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் உறுதுணையாக நின்ற, எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பொதுமக்கள் காட்டும் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி" என்று ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, ‘எது நடந்தாலும் எனது கடமை ஒன்றே... இந்தியாவின் எண்ணத்தை பாதுகாப்பது’ என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் தகுதியிழப்புக்கு ஆளான ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக முடியும் என்பதால் இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. | வாசிக்க > “நாடாளுமன்றத்தில் மீண்டும் கர்ஜனை” - ராகுல் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததில் காங்கிரஸ் உற்சாகம்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மூன்று விஷயங்களை அவதானித்தது. அது குறித்து முழு விவரம்: ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

காங்கிரஸ் ரியாக்‌ஷன்கள்:

‘உண்மையை மறைக்க முடியாது’ - உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "மூன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், நிலவு, உண்மை - கவுதம புத்தர்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நியாயமான தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், "வாய்மையே வெல்லும்" என்றும் தெரிவித்துள்ளார்.

வெறுப்புக்கு எதிரான வெற்றி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "இது வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி, சத்யமவே ஜெயதே. ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளது.

உலகமே சபாநாயகரை பார்க்கிறது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "சபாநாயகர் இப்போது முடிவு எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும், உலகமும் சபாநாயகரை உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறது. தாமாகவே தகுதி இழப்பை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அதுநான் நமது தேவை நாட்டுக்கானத் தேவை. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதிமன்ற உத்தரவு நகலுடன் சபாநாயருடன் கோரிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்.

சபாநாயகருக்கு கடிதம் எழுதுவேன்: “உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராகுல் காந்திக்கு மிகப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. ராகுல் காந்திக்கு எதிரான சதிச்செயல் இன்று தோல்வியடைந்துள்ளது. நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். ராகுல் காந்தியின் தகுதி இழப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து நான் சபாநாயகருக்கு எழுதுவேன்" என்று காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சிங்கம் மீண்டும் கர்ஜிக்கும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் சிங்கம் மீண்டும் கர்ஜிக்க இருப்பதால் நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் ராகுல் காந்தியின் தகுதி இழப்பை சபாநாயகர் ரத்து செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கருத்து: முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றது. ராகுல் காந்தியை வயநாடு தக்கவைக்கிறது.குற்றவியல் அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, நமது நீதித் துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதன் விவரம்: “பாஜக மமதைக்கு அணைபோட்ட உச்ச நீதிமன்றம்” - மார்க்சிஸ்ட், விசிக கருத்து

கே.எஸ்.அழகிரி கருத்து: மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு மிகப் பெரிய அடியாக அமைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதன் விவரம்: “மக்களின் குரலாக மக்களவையில் ராகுல் காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப் போகிறது” - கே.எஸ்.அழகிரி

முத்தரசன் வலியுறுத்தல்: ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அதை வாசிக்க > ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE