ஊழல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை: கர்நாடக அமைச்சர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி எச்சரிக்கை

By இரா.வினோத்


புதுடெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்தார்.

வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் பரமேஷ்வரா, தினேஷ் குண்டுராவ் உட்பட 50 மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது மல்லிகார்ஜூன கார்கே, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெற வைத்ததை போல, மக்களவை தேர்தலிலும் வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். க‌ர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் குறிவைத்து இப்போது பணிகளை தொடங்க வேண்டும். இதற்காக தனி தேர்தல் வாக்குறுதி, தொகுதிவாரியாக வியூகம், மாவட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து தலைமை முடிவெடுக்கும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், தேர்தலின்போது அனைத்து வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் மக்களை மத ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ பிரித்து அரசியல் செய்யக்கூடாது. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழல் செய்வதை அனுமதிக்க முடியாது. யாராவது ஊழல் புரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE