ஆக. 22 முதல் 24 வரையில் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென்னாப்பிரிக்க அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆக.3) தொலைபேசியில் உரையாடினார்.

நடப்பு ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் முப்பதாவது ஆண்டு நிறைவடையும் நிலையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

வரும் 22 முதல் 24-ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பிரதமருக்கு தென்னாப்பிரிக்க அதிபர் விளக்கினார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோகன்னஸ்பர்க் நகருக்குப் பயணிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

பரஸ்பர நலன் கொண்ட பல்வேறு விவகாரங்கள், பிராந்திய மற்றும் உலகளாவிய சிக்கல்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்த தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தர ஆவலாக இருப்பதாகக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE