டெல்லி மசோதா | மக்களவையில் அமித் ஷா விமர்சனமும்; ட்விட்டரில் கேஜ்ரிவாலின் பதிலடியும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி டெல்லி சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றிய நிலையில் அமித் ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை ட்விட்டர் வாயிலாகப் பதிவு செய்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் பதவிக்காலம், ஊதியம் மற்றும் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு தொடர்பான விஷயங்களில் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பதை நிலைநாட்ட ஒரு சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வந்தது. அதன்படி டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்த மசோதா குறித்து இன்று (வியாழக்கிழமை) மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். டெல்லியில் நடைபெறும் ஊழலுக்கு துணைபோக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 2015ல் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி எதற்கெடுத்தாலும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அக்கட்சிக்கு அதிகாரிகள் பணியிட மாற்றம் பிரச்சினையில்லை. அவர்களுக்கு பிரச்சினை என்னவென்றால், அவர்களின் ஊழலை மறைக்க ஊழல் கண்காணிப்புத் துறையை தங்களின் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாவில்லை என்பதே. பங்களா ஊழல் பகிரங்கமாவதில் அவர்களுக்குப் பிரச்சினை. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதை அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரி, நேரு என பல தலைவர்களும் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மசோதா நிறைவேறியவுடன் இண்டியா கூட்டணிக்கு கேஜ்ரிவால் குட் பை சொல்வார்" என்றார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "டெல்லி மசோதாவை நிறைவேற்ற அமித் ஷா மக்களவையில் கூறிய காரணங்களில் ஒன்றுகூட பொருத்தமானது அல்ல. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கே தெரியும். அவர்கள் டெல்லி மக்களை அடிமையாக்கும் நோக்கில் இதனைச் செய்கிறார்கள். இந்த சட்ட மசோதா அவர்களை டெல்லி மக்களவை நிற்கதியாக்கும். இதை இண்டியா கூட்டணி அனுமதிக்காது" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவசர சட்டத்தின் பின்னணி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. டெல்லி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதாக இந்த மோதல் முற்றியது. இதையடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் என்பதை உறுதிப்படுத்தக் கோரி ஆளும் ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.

இந்த வழக்கில், “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணை நிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது” என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், டெல்லியின் அதிகாரம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்றும், வேண்டுமானால் இவ்விஷயத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

இதையடுத்து, தீர்ப்பு வந்த சில நாட்களிலேயே, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. அவசர சட்டத்தின்படி, என்சிசிஎஸ்ஏ-வுக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். டெல்லியின் நிர்வாகியாக துணை நிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE