நூ வன்முறைக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் நூ மாவட்ட வன்முறைக்கு எதிராக டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் போராட்டங்கள் நடத்தும் விஎச்பி-யின் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என். பாட்டீ ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “நூ வன்முறைக்கு எதிராக போராட்டங்களில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் மற்றும் வன்முறைக்கு இடமளிக்க கூடாது. இதனை ஹரியாணா, டெல்லி, மற்றும் உ.பி. அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகள் தவிர, வீடியோ மூலமும் போராட்டங்களை பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் வாதிடும்போது, “டெல்லியில் காலையில் இருந்து 23 போராட்டங்கள் நடந்துள்ளன. மாலையில் பதற்றமான இடங்களில் போராட்டங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கிறோம்” என்றார். இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரானார்.

ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஎச்பி ஊர்வலத்தை தடுக்க முயன்ற ஒரு கும்பல் கற்களை வீசி, கார்களுக்கு தீ வைத்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE