புதுடெல்லி: கடந்த மே 18-ம் தேதி சர்வதேச அருங்காட்சியக தினத்தில், டெல்லி பிரகதி மைதானத்தில் 3 நாள் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் வரவிருக்கும் தேசிய அருங்காட்சியகத்தின் மெய்நிகர் காட்சித் தொகுப்பை வெளியிட்டார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் சுமார் ரூ.2,700 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்தார். இந்த விழாவிலும் ‘யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகம்’ குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த அருங்காட்சியகம் உலகிலேயே மிகப்பெரியதாக அமைகிறது.
டெல்லியின் மையப்பகுதியில் நார்த் மற்றும் சவுத் பிளாக் கட்டிடங்களில் 1.17 லட்சம் சதுர மீட்டரில் 950 அறைகளுடன் தரை தளம் மற்றும் 3 மாடிகளில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது, 8 கருப்பொருள் பிரிவுகளை கொண்டிருக்கும். 5 ஆயிரம் ஆண்டுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.