ஹரியாணா கலவரம் | நூ மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

By செய்திப்பிரிவு

மேவாட்: ஹரியாணா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டுமென வேண்டுகோள்.

“கலவரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கலவரத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என நுஹ் மாவட்ட துணை கமிஷனர் பிரசாந்த் பன்வார் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. உடனடியாக போலீஸுக்கு தகவல் கிடைக்க போலீஸார் அங்கு குவிந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் போலீஸார் சுட்டனர். அரசாங்கம், தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE