தக்காளி விலை ஏற்றத்தால் ஆந்திராவில் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்த விவசாயி

By செய்திப்பிரிவு

கோலார்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி(48). கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது.

தக்காளி விவசாயத்தில் அதிக லாபம் அடைந்தது குறித்து முரளி கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் எனக்கு ரூ.1.5 கோடி கடன் ஏற்பட்டது. அடிக்கடி மின்தடையால் விளைச்சலும் சரியாக இல்லை.

ஆனால் இந்தாண்டு அதிர்ஷ்ட காற்று வீசியது. எனது நிலத்தில் விளைச்சலும் அமோகமாக இருந்தது. இதுவரை 35 முறை அறுவடை செய்துவிட்டேன். எனது வயலில் இன்னும் 15 முதல் 20 முறை தக்காளி அறுவடை செய்யலாம். தக்காளிக்கு கோலார் வேளாண் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், 130 கி.மீ தூரம் பயணம் செய்து தக்காளியை விற்பனை செய்கிறேன். கடந்த 45 நாளில் ரூ.4 கோடிக்கு தக்காளியை விற்பனை செய்தேன்.

ஒரு காலத்தில் தக்காளி விற்றதில் கிடைத்த ரூ.50 ஆயிரத்தை என் தந்தை வீட்டுக்கு கொண்டுவந்து அலமாரியில் வைத்தார்.அந்த அலமாரியை குடும்பமேதொட்டு வணங்குவோம். அதேஅலமாரியில் நான் கோடிக்கணக்கில் பணம் வைப்பேன்என நினைத்ததில்லை. எனது மகன் பொறியியலும் மகள் மருத்துவமும் படிக்கின்றனர். எனது கடன்களை எல்லாம் அடைத்த பிறகும், எங்கள் வீட்டு அலமாரியில் ரூ. 2 கோடி உள்ளது.

இந்தப் பணம் மூலம் மேலும் நிலத்தை வாங்கி தோட்டக்கலையை நவீன தொழில்நுட்பத்துடன் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். சில நேரங்களில் விவசாயத்தில் விளைச்சல் தோல்வியடைந்து கடன் ஏற்படலாம். ஆனால் விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்து, அந்த தொழிலை மதிப்பவர்கள் ஒரு போதும் தோல்வியடையமாட்டர்கள். இவ்வாறு முரளி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE