மணிப்பூர் விவகாரம் | நாடாளுமன்றத்துக்கு கருப்புச் சட்டையில் வருகைதந்த இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க இன்று (ஜூலை 27) இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு கருப்பு ஆடை அணிந்துவந்த வண்ணம் உள்ளனர். இதனால் இருஅவைகளில் இன்றும் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை மணிப்பூர் விவகாரம் இரு அவைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நேற்று எதிர்க்கட்சிகள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் ஏற்கப்பட்டது.

இந்நிலையில் இன்றுஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு கருப்பு ஆடை அணிந்துவந்த வண்ணம் உள்ளனர். இதனால் இருஅவைகளில் இன்றும் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மி எம்.பி. விளக்கம்: ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சட்டா இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அளித்தப் பேட்டியில்,"மணிப்பூர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராகவும், அங்கே நிகழும் காட்டுமிராண்டித்தனங்களைக் கண்டித்தும் இன்றைய தினம் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம். இது ஓர் அடையாளப் போராட்டம். மணிப்பூர் மக்களின் துயரில் நாங்கள் துணை நிற்கிறோம் என்பதை நிறுவுகிறோம்.

மணிப்பூரும் இந்தியாவின் பகுதி என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மணிப்பூர் பற்றி எரியும் இவ்வேளையில் அரசு தனது அரசியல் சாசனக் கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மணிப்பூரில் ஆளும் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

நாங்கள் நிர்பந்திக்கபட்டோம்: காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச வாய்ப்பில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் பிரதமர் பேச வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால் பிரதமர் ஏன் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. அதனாலேயே நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நிர்பந்திக்கப்பட்டோம். அந்தத் தீர்மானத்தால் ஆட்சிக்கு பாதிப்பில்லை என்பது எங்களுக்கே தெரியும். ஆனாலும் வேறு வழியில்லையே!. நாட்டின் பிரதமர் நாட்டு மக்கள் முன்னர் வந்து மணிப்பூர் பற்றி பேச வேண்டும்" என்றார்.

நாடாளுமன்றத்தை முடக்கப்போவதில்லை: சமாஜ்வாடி கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ் அளித்தப் பேட்டியில், "இன்று நாங்கள் அமளியில் ஈடுபடப்போவதில்லை. மாறாக கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம். அல்லது எம்.பி.க்கள் கருப்புத் துணியை கையில் கட்டி வருவார்கள். நாங்கள் மணிப்பூர் விவகாரத்தில் அக்கறை காட்ட இன்னொரு காரணம் அது மியன்மார் எல்லையை ஒட்டி இருப்பதும்கூட. மியன்மாரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கே தீவிரவாதிகள் அட்டகாசமும் இருக்கிறது. இந்தச் சூழலில் மணிப்பூர் அமைதி முக்கியம்" என்றார்.

இதற்கிடையில் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மனீஷ் திவாரி, மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE