புதுடெல்லி: 2024-ல் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவாவது நடைபெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள சர்வதேச கண்காட்சி, மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் மோடி நேற்று (ஜூலை 27) திறந்து வைத்தார். இதற்கு பாரத் மண்டபம்என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 3-வது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும். எனது தலைமையிலான 3-வது ஆட்சியின்போது இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமாக இருக்கும். எனது முதல் ஆட்சியில் உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது. 2-வது ஆட்சியில் 5-ம் இடத்துக்குமுன்னேறி உள்ளது. இந்த வரிசையில், 3-வது ஆட்சியில் உலகின்3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்." என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பதிலில், "பிரதமரின் இந்த வாக்குறுதி வழக்கமானதுதான். அவர் பாணியில் அவர் கணிப்புகளை தனக்கு சாதகமாக்கிப் பேசியுள்ளார். மோடி அல்ல யார் ஆட்சி அமைந்தாலும் 2023ல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.