மக்களவைத் தேர்தலில் மஜத தனித்துப் போட்டி - முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவிப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சி தனித்துப் போட்டியிடும் என முன்னாள் பிரதமரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான எச்.டி. தேவகவுடா தெரிவித்துள்ளார்.

தேவகவுடாவின் மகனும், மஜத‌ மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த வாரம், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவுடன் மஜத‌ இணைந்து செயல்படும். வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பாஜக உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு தேவகவுடா, ‘‘வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி வலிமையாக உள்ள இடங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துவோம். ஐந்து அல்லது ஆறு இடங்களில் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வென்றாலும் கவலை இல்லை. ஆனால் மஜத இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளது. என்டிஏ அல்லது இண்டியா கூட்டணியில் சேர மாட்டோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE