புதுடெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள சர்வதேச கண்காட்சி, மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதற்கு பாரத் மண்டபம்என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி வருகின்றன. இப்போது உலகின் உயரமான ரயில் பாலம் இந்தியாவில் உள்ளது. இதுபோல உலகிலேயே உயரமான மலைப்பகுதியில் நீளமான சுரங்கப்பாதையும் இந்தியாவில் உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 3-வது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும். எனது தலைமையிலான 3-வது ஆட்சியின்போது இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமாக இருக்கும். எனது முதல் ஆட்சியில் உலக அளவில் இந்திய பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது. 2-வது ஆட்சியில் 5-ம் இடத்துக்குமுன்னேறி உள்ளது. இந்த வரிசையில், 3-வது ஆட்சியில் உலகின்3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.