கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தரவுகள் கசிந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு: மத்திய அமைச்சர் அஷ்வின் தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தரவுகள் கசிந்த விவகாரத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. இதனை எம்.பி டி.ரவிகுமார் கேள்விக்கு மக்களவையில் அளித்த பதிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தகவல் அளித்துள்ளார்.

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்கள், அவர்களின் தனிப்பட்ட முக்கியமான தகவல்கள் டெலிகிராம் எனும் சமூகவலைதளத்தில் கசிந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது. இதன் மீதான விசாரணை குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி.,யுமான டி.ரவிகுமார் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

தனது கேள்வியில் டி.ரவிகுமார் கூறுகையில், இதுபோன்ற முக்கியத் தரவுகள் வெளியான மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இந்த சமீபத்திய தரவுக் கசிவின் பின்னணியில் உள்ளவர்களை அரசாங்கத்தால் அடையாளம் காண முடிந்ததா?

இதன் இணையதளத்தில் குடிமக்களின் தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தரவுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கத்தால் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?’ எனக் கேட்டிருந்தார். இதற்கான எழுத்துபூர்வமானப் பதிலை இன்று மக்களவையில் தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் இணையம் எல்லோரும் அணுகக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், அனைத்துப் பயனர்களுக்கும் பொறுப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

இணையத்தின் விரிவாக்கத்தாலும், அதிகமான இந்தியர்கள் ஆன்லைனில் வருவதாலும், குடிமக்கள் தீங்கு மற்றும் குற்றச்செயல்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. பல்வேறு இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அரசாங்கம் முழுமையாக அறிந்திருக்கிறது .

ஜூன் 2023 இல் கோவின் தரவுகள் கசிந்த சம்பவத்தை அறிந்து, சிஇஆர்டியின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் மேற்கொண்டது. அமைச்சகம் அளித்த புகாருக்கு காவல்துறையால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையை எளிதாக்க சிஈஆர்டி உரிய விவரங்களை வழங்கியுள்ளது. கோவின் இணையதளத்தில் குடிமக்களின் தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தரவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பின்வருவன உட்பட 12 விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிபி அங்கீகாரம் மூலம் மட்டுமே பயனாளி தடுப்பூசி விவரங்களைப் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் அணுக முடியும். பயனாளியின் மொபைல் எண்கள், ஆதார் எண் மற்றும் பிற புகைப்பட அடையாள அட்டை எண்கள் மறைக்கப்பட்டுள்ளன.

கோவின் பயனர்களுக்கு (சேவை வழங்குநர்கள்) கடைசி 4 எழுத்துகள் மட்டுமே தெரியும். முழுமையான கோவின் தரவுத்தளமானது குடிமக்களின் தரவைப் பாதுகாப்பதற்காக "குறியாக்க அல்காரிதம்" விசையைப் பயன்படுத்தி குறியாக்கம் செய்யப்படுகிறது.

இதன் அனைத்து முக்கிய தகவல்களுக்கும் தரவு ஒருமைப்பாடு மூலம் பராமரிக்கப்படுகிறது. பயனர்கள் (சேவை வழங்குநர்கள்) உள்நுழையும்போது இரண்டு காரணி அங்கீகார அம்சமானது கோவின்னுக்குள் அங்கீகரிக்கப்படாதவர்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் போன்களைப் பாதுகாப்பதற்கும் ஃபிஷிங் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சாத்தியமான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றிய தேவையான சூழ்நிலை விழிப்புணர்வை உருவாக்க தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE