100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து ஒரே ஆண்டில் 5 கோடி பணியாளர்கள் நீக்கம்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2022- 2023 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புஉறுதித் திட்டத்திலிருந்து (MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme ) 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தகவலை எழுத்துபூர்வ பதிலாகத் தெரிவித்துள்ளார். இது கடந்த 2021- 22 நிதியாண்டை ஒப்பிடுகையில் 247% அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.

இந்நிலையில், 2022- 2023 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புஉறுதித் திட்டத்திலிருந்து (MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme ) 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கவுரவ் கோகோய், விகே ஸ்ரீகாந்தன் ஆகியோர் 2022-23 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை 244.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'தி இந்து' ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கிரிராஜ் சிங் இந்தப் பதிலை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "இதுபோன்று பணியாளர்கள் நீக்கப்படுவது வழக்கமான செயல்தான். இவற்றை மாநில அரசுகள் தான் மேற்கொள்கின்றன. 1.போலி வேலை அட்டை, 2.வேலையில்லை விருப்பமின்மை, 3.வேலைபார்த்துவந்தவர் குடும்பத்துடன் ஒரு பஞ்சாயத்தில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்தல், 4.ஒரே ஒரு நபர் மட்டுமே ஒரு பகுதியில் பணியில் இருத்தல், 5.சம்பந்தப்பட்ட நபர் உயிரிழத்தல் போன்ற காரணங்களால் மாநில அரசுகள் சிலரை இத்திட்டத்திலிருந்து நீக்குவதாகத் தெரிவித்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் புள்ளிவிவரங்களின்படி ஒருவரை இத்திட்டத்திலிருந்து நீக்க மேற்கூரிய ஐந்து காரணங்கள் உள்பட மொத்தம் 10 காரணங்கள் இருக்கின்றன" என்றார்.

ஆதார் இணைப்பே பிரச்சினையா? முன்னதாக ’தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில் ஆதார் எண்ணுடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டையை இணைக்க வலியுறுத்தியதும், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை ஆதார் அடிப்படை பணம் செலுத்துதல் முறைக்கு மாற்றியதுமே பணியாளர்கள் வெகுவாகக் குறையக் காரணம் என்று குறிப்பிடப்ட்டிருந்தது. 2023 தொடங்கி ஜூன் மாதம் 23 ஆம் தேதி வரை 61 லட்சம் பதிவு செய்யப்பட்ட பணியாட்களின் பெயர் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆதார் - ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு 4வது முறையாக ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. இது இத்திட்டத்தின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதையும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் கேள்வியில் சுட்டிக்காட்டியிருக்க அதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த அமைச்சர் கிரிராஜ் சிங், "ஆதார் - ஊரக வேலை அட்டை இணைப்பை முறைப்படுத்தி உறுதி செய்தல் மாநில அரசுகளின் பொறுப்பு" என்று கூறியிருக்கிறார்.

மேற்குவங்கத்தில் முற்றிலும் முடக்கம்: நாடு முழுவதும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2021-22 மற்றும் 2022-23 நிதி ஆண்டுகளில் நீக்கப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அங்கே இது 5,199 சதவீதமாக உள்ளது. மேற்குவங்க மாநிலத்துக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முற்றிலுமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது. திட்டத்தை முறையாகப் பின்பற்றாததால் நிதியை நிறுத்தியதாக மத்திய அரசு காரணம் கூறியுள்ளது.

அடுத்தபடியாக தெலங்கானாவில் 2727%, ஆந்திரப் பிரதேசத்தில் Pradesh 1147%, உத்தரப் பிரதேசத்தில் 466%, உத்தராகண்டில் 427% பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பயணாளர்கள் நீக்கம் 247% ஆக அதிகரித்துள்ளதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE