விருப்ப ஓய்வுக்கு பிறகும் பல ஆண்டுகளாக ஊதியம் பெற்ற அரசு பொறியாளர்கள் - ரூ.100 கோடி இழப்பை வசூலிக்க உ.பி. அரசு உத்தரவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அரசுப் பொறியாளர்கள் விருப்ப ஓய்வுக்கு பிறகும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ஏற்பட்ட ரூ.100
கோடி இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உ.பி.யின் வீட்டு வசதி வளர்ச்சித் துறையில் கடந்த 2009-ல் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) திட்டம் அறிவிக்கப்பட்டது. 58 வயதானவர்களுக்கான இத்திட்டத்தில் ஓய்வு வயது 60 வரையிலான அனைத்து சலுகைத் தொகையும் அளிக்கப்பட்டது. இதை, ஏற்று அத்துறையின் 299 பொறியாளர்கள் 2 வருட சலுகைகளுடன் விஆர்எஸ் பெற்றனர்.

ஆனால் அவர்களது பெயர்கள் அவர்கள் பணியாற்றிய அலுவலகப் பதிவேடுகளில் இருந்து அகற்றப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் மாத ஊதியமும் பிற சலுகைத் தொகைகளும் கிடைத்துவந்துள்ளது. இச்சூழலில், அத்துறையின் ஓர் அலுவலகத்தில் புதிதாக அமர்த்தப்பட்ட ஒரு கணக்காளர், அலுவலர்களின் பதி
வேடுகளை சரிபார்த்துள்ளார். அதில் விஆர்எஸ் பெற்றவர்களும் ஊதியமும் சலுகைகளும் பெற்றிருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

சிலர் உயிருடன் இல்லை: இது, மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அத்துறையின் பிற அலுவலகங்களிலும் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டன. இதில் மேலும் பலர் ஊதியமும் சலுகைகளும் பெற்றிருப்பதும் இதனால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து இத்தொகையை திரும்ப வசூலிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த தொகையை வசூலிப்பதே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை என்பதும் சிக்கலாகிவிட்டது.

குழு அமைப்பு: இந்த முறைகேட்டை விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட் டுள்ளது. இதன் முதற்கட்ட விசாரணையில், தற்போது பணியில் உள்ள சிலரின் உதவியால் இந்த
முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இத்துடன், உ.பி.யின் வேறு சில துறைகளிலும் இந்த சட்டவிரோத செயல்நடைபெற்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அனைத்து துறைகளின் அலுவலர் பதிவேடுகளை ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE