கர்நாடகாவில் அருவிக்கு அருகில் வீடியோ எடுத்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர் சரத்குமார் (23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் நேற்று முன்தினம் கொல்லூர் அருகில் அரசினகுன்டி அருவிக்கு சென்றார். அங்கு சில தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இந்நிலையில் சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காக அருவிக்கு அருகில் சென்று நடனம் ஆடுவதைப் போன்று வீடியோ எடுத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அருவியில் தவறி விழுந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சரத்குமார் நீரில் விழுந்து 48 மணி நேரத்துக்கு மேலாகியும் அவரது உடலை கண்டெடுக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் உயிரிழந்து, நீரில் நீண்ட தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என மீட்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து அரசினகுன்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சரத்குமார் கடைசியாக எடுத்து வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE