சிம்லா: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை கடந்த ஜுன் 24-ம்தேதி தொடங்கியதில் இருந்து இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளனர். 187 பேர் காயம் அடைந்தனர். 15 பேரை காணவில்லை.
மழை மற்றும் வெள்ளத்தில் 592 வீடுகள், 235 கடைகள், 1616 மாட்டு தொழுவங்கள் முற்றிலும் சேதமடைந்தன. 5,265 வீடுகளில் ஒரு பகுதி சேதம் அடைந்தன. இந்த பாதிப்பு குறித்து மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்பு ரூ.8 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சேதம் அடைந்த சாலைகள், பாதிப்பு ஏற்பட்ட மின் மற்றும் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டியுள்ளது. இமாச்சலில் ஏற்பட்ட சேதத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்துக்கு உடனடி நிவாரணம் தேவை. மத்திய அரசிடமிருந்து 2022-23-ம்ஆண்டுக்கான பேரிடர் நிதியில் இருந்து நிலுவையில் உள்ள ரூ.315 கோடியை வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
» விழுப்புரம் | திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி விஏடி கலிவரதன் கைது
» இந்தியாவும் அதன் மாநிலங்களும் | டேட்டா ஸ்டோரி: தகவல் தொழில்நுட்பம்
பேரிடர் நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அரசியல் செய்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு நிவாரணம் கிடைக்க அனைத்துக் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாக ஜெய் ராம் தாக்கூர் கூறுவது சரியல்ல.
இவ்வாறு சுக்விந்தர் சிங் சுகு கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் 1,700 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ரூ.5கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக குல்லு துணை ஆணையர் அசுதோஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. இமாச் சலப் பிரதேசத்தில் நேற்று பல பகுதிகளில் கனமழை பெய்தது. சிர்மார் மாவட்டத்தில் 195 மி.மீ மழை பதிவானது.